ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கீழே விழுந்ததால், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், ஜெய்ப்பூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மற்றொரு அறைக்கு சென்ற போது கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் நேற்று மாலை நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘முதல்வர் நடந்து சென்ற போது திடீரென அவரது கால் இடறியதால் கீழே விழுந்துள்ளார். இரு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. வலது காலின் நகம் பெயர்ந்து காயம் அடைந்தது. கிட்டத்தட்ட 7 நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கெலாட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வரவிருக்கும் நாட்களுக்கான நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வரின் லோகேஷ் சர்மா கூறுகையில், ‘முதல்வர் கெலாட்டின் உடல்நிலை நன்றாக உள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது’ என்றார். இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட பதிவில், ‘எனது வீட்டில் உள்ள எனது அறைக்கு செல்லும் போது, இரு கால்விரல்களும் இடறி கீழே விழுந்தேன். எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் பணிக்கு திரும்புவேன். எலும்பு முறிவு காரணமாக, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சில நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
The post வீட்டிற்குள் கால் இடறி கீழே விழுந்ததால் ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு எலும்பு முறிவு appeared first on Dinakaran.